கோடை காலம் தோடங்கி விட்டாலே சிரமம் தான். நம்மை பாதுகாத்துக் கொள்வது ரோம்ப கடினம். மக்கள் குளிர்ச்சியான பொருட்களைத் தேடி ஒடுவார்கள். சூரியனிலிருந்து வெளிப்படும் வேப்பம் அதிகரிக்க அதிகரிக்க, நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கும்.
அப்போது மூளையில் உள்ள “ஹைப்போதலாமஸ்” எனும் பகுதி, நமக்கு வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஆனாலும் இந்த முயற்சிக்கும் ஓர் எல்லை உண்டு.
அக்னி நட்சத்திர வெயிலின் போது ஹைப்போதலாமஸ் தன்னுடைய முயற்சியில் தோற்றுப் போகிறது. உடலின் வெப்பத்தை ஒரளவுக்குத் தான் குறைக்கிறது. அப்போது வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சைத் தொற்று, நீர்க் கடுப்பு எனப் பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன. அதே வேளையில் நம் உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்து கொண்டால் வெப்ப நோய்களை வெல்வது எளிது.
பொதுவாக கோடைகாலம் என்றாலே பலரும் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஏனென்றால், குழந்தைகளுக்கு கோடையில் பள்ளி விடுமுறை கிடைப்பதால், சொந்த ஊர்களுக்கு செல்வது, பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது என்று இருப்பார்கள். அதே சமயம், கோடை வந்து விட்டால் உடல் ரீதியான பல பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவற்றை எப்படி வீட்டில் இருந்த படியே சரி செய்வது என்று பார்க்கலாம்.
கோடையில் ஏற்படும் பிரச்சனைகள்:
பொதுவாக கோடையில் ஸ்கின் ப்ர்ன், ஹீட் ஸ்ட்ரோக், கண் சோர்வு , கண் எரிச்சல், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணம் உடல் சூடு அதிகரிப்பது.
வெப்பத் தளர்ச்சி:
உடல் சூடு அதிகரிக்கும் போது, உடலில் வேறு சில பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மனித உடலின் இயல்பான வெப்ப நிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட், வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டி விடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். மலச் சிக்கல், மூல நோய், அஜீரணத் தொந்தரவுகள் அதிகரிக்கும்.
மேலும்தலைவலி, வாந்தி, தலை சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலிலிருந்து சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல உப்புக்கள் வெளியேறி விடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, வெயிலில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு இன்னும் கூடுதலாக இந்தப் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
வெப்ப மயக்கம்:
நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவார்கள். இது வெப்ப மயக்கத்தின் விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தால் தோலிலுள்ள ரத்தக் குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது.
இதனால், இதயத்துக்கு இரத்தம் வருவது குறைந்து, இரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைஙக்கு போதுமான இரத்தம் கிடைப்பதில்லை. இதன் விளைவாக மயக்கம் வருகிறது.
மேலும் அமைதியின்மை , சோர்வு, உடல் அரிப்பு, போன்றவையும் கோடையில் அதிகமாகக் காணப்படும். மேலும், கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றோருக்கும் கோடை காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் இன்னும் அதிகமாகக் காணப்படும்.
சிறுநீர்க் கடுப்பு:
கோடையில் பல பேருக்கு அதிக அளவில் தொல்லை தருவது சிறுநீர்க் கடுப்பு. தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. குடிக்கும் தண்ணீரின் அளவு குறையும் போது உடலில் நீர்ச் சத்து குறைந்து விடுகிறது.
இதன் விளைவால் சிறு நீரின் அளவும் குறைந்து விடும். அப்போது சாதாரணமாகக் காரத் தன்மையுடன் இருக்கின்ற சிறுநீர் , அமிலத் தன்மைக்கு மாறி விடும். இதன் விளைவு தான் சிறுநீர்க் கடுப்பு. அடுத்து, சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புக்கள் கடினமாகி, சிறு நீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துசிறுநீர்க் கல் உருவாகும். இதனாலும் சிறுநீர்க் கடுப்பு ஏற்படும்.
அதே போன்று கோடையில் சந்திக்கும் மற்றோரு பிரச்சனை என்றால் நீர்ச் சத்து குறைபாடு. உடலில் நீர்ச் சத்து குறையும் போது , அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றோடு சேர்த்து ரத்தக் கொதிப்பும் அதிகரிக்கும். இதனால் நீர் சுருக்கு ஏற்படவும், மூச்சுத் திணறல் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வெயிலின் அளவைக் குறைத்துக் கொண்டு , நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சனை சரியாகி விடும்.
உணவுகள் கெட்டுப் போதல்:
கோடையில் எதிர் கோள்ளும் மற்றொரு பிரச்சனை சமைத்து வைத்த உணவுகள் விரைவில் கெட்டுப் போய் விடும். அது தெரியாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.
சிறுநீர்த் தொற்று:
சிலர் தண்ணீர் அதிகமாகக் குடிக்க மாட்டார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். மேலும், தோல் பிரச்சனைகளால் தோல் சிவந்து போதல் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு அதிகம். சரும பிரச்சனைகள் , முகப்பரு தொந்தரவு போன்றவை வெயில் காலங்களில் அதிக அளவு ஏற்படும்.
அது போன்று கோடையில், சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வியர்க்குரு:
கோடையில் சுற்றுப்புற வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40 லிருந்து 45 டிகிரி செல்சியஸைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க வழக்கத்தை விட, மூன்று மடங்கு வியர்வை சுரக்கிறது. இந்த வியர்வையை அவ்வப்போதுத் துடைத்து உடலைச் சுத்தமாகப் பராமரிக்கா விட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குரு பவுடர் அல்லது காலமின் லோசனை வியர்க்குருவில் பூசினால் அரிப்பு குறையும்.
அம்மை நோய்கள்:
கோடை வெப்பத்தால் நிலம் வெப்பம் அடையும் போது குப்பை கூளங்களில் குடியிருக்கும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றின் மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்று தான் வேரி செல்லா ஜாஸ்டர் எனும் வைரஸ் கிருமிகள். இந்தக் கிருமியால் நமக்குச் சின்னம்மை ஏற்படுகிறது. அந்நோய் வந்து குணமான பின்னரும் சிலருக்கு இந்த நோய்க் கிருமிகள் நரம்புகளில் தங்கி, பல ஆண்டுகள் கழித்து , அக்கி அம்மையை’ ஏற்படுத்தும். இதுபோல் மீசில்ஸ் வைரஸ், தட்டம்மை நோயை ஏற்படுத்தும். இந்த அம்மை நோய்களைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. தேவைப் பட்டால் போட்டுக் கோள்ளலாம்.
கோடை காலத்தில் நோய்களைத் தவிர்க்கும் வழிகள்:
மேலே சொன்ன அத்தனை பிரச்சனைகளையும் தவிர்ப்பதற்கு நாம் வீட்டில் இருந்த படி சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும். அவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்.
தண்ணீர் அதிகமாக குடியுங்கள்:
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வரை தண்ணீரைக் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் பழச் சாறுகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினசரி ஒரு இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது நீர் மோர் குடிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் , நீர் பழங்களான தர்பூசணி, நுங்கு போன்றவை அதிகமாகச் சாப்பிடலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள் வாங்கி, சுற்றுச் சூழல் வெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி உடலின் வெப்பத்தை குறைக்கிறது.
இதனால், உடலின் நீரிழப்பால் ஏற்படுகிற பாதிப்புகளான நீர்ச் சுறுக்கு, சிறு நீர்த் தொற்று, பித்தப்பை கற்கள் போன்றவை உடனடியாக ஏற்படாமல் தடுக்கிறது.
பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்:
தர் பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலா பழம் அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச் சத்து பழங்களையோ, பழச் சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறி விடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக் கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்:
அதிக மசாலாக்கள் சேர்த்த உணவுகள், காரமான உணவுகள், எண்ணெய்யில் அதிகம் பொரித்த உணவுகள் போன்றவற்றை முடிந்தளவு தவிர்த்து விட வேண்டும். அதிகளவு நீர் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்
கற்றாழைச் சாறு குடிப்பது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக, காலையில் ஒரு டம்ளர் மோரில் ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனுடன் நன்கு அலசி சுத்தம் செய்த கற்றாழையை சேர்த்து மிக்சியில் அடித்து குடிக்கலாம்.
அல்லது தேங்காய்ப் பாலில் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங் கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து அடித்துக் குடிக்கலாம். இதைத் தொடந்து குடித்து வரும் போது, உடல் சூட்டை குறைத்து சரும பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து விடும் இது மூல நோயைத் தடுக்கும் சிறந்த மருந்தாகும்.
கோடையை சமாளிப்பது எப்படி:
விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இரண்டும் சேர்த்து ஒரு பத்து மில்லி கிராம் எடுத்து கலந்து தொப்புளைச் சுற்றி தடவி விட்டு, அதன் மீது ஒரு காட்டன் டவல் எடுத்து நனைத்து பிழிந்து விட்டு இருபது நிமிடம் போட்டு வைத்தால் உடல் சூட்டை உடனடியாக குறைத்து விடும்.
அஜீரண தொந்தரவு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அதிகம் ஆகாமல் பார்த்துக் கொள்ளும். உணவு செறியாமை தொந்தரவை சரி செய்யும். மேலும் மாதவிடாய் சழற்சியை சரி செய்யவும் இது உதவும்.
சிலருக்கு சருமம் வறண்டு போதல், சரும எரிச்சல் போன்றவை இருக்கும். சிலருக்கு அதிக வியர்வை சுரப்பினால், உடலில் உப்பு பூத்து, மணல் போன்று நர நரவென்று இருக்கும். அவர்கள் ஒரு நாளில் 2-3 வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
செய்யக் கூடாதவை:
காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். செயற்கைக் குளிர்பானங்கள் குடிக்க கூடாது. காரணம், குளிர் பானங்களை வரம்பின்றி அருந்தும் போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கி விடுகிறது.
இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து , தளர்வான வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும் .
கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை கோண்டது. ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதே போல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும்.
தெருவோர உணவுகள் அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எண்ணேயில் பொரிக்கப் பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதே போல், கோடை காலங்களில் அதிகளவு உடலை வறுத்திக் கொள்ளும் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மெல்லிய பயிற்சிகள் செய்வது நல்லது.
நடைப்பயிற்யசியிலும், வேக நடையைத் தவிர்த்து மிதமான வேகத்திலேயே நடப்பது நல்லது.