சர்க்கரை நோய் அறிகுறிகள், வகைகள் அதற்கான தீர்வுகள்

இன்றைக்கு மக்கள் பலரும் சர்க்கரை வியாதியால் பலவித ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எங்கு தன்னை கவனிக்க மறந்து விடுகிறார்கள் என்றால், அவர்கள் உடலில் ஏற்படும் அறிகுறிகளை பொருட்படுத்தாமல் இருக்கும் போது மட்டுமே, பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

 

 

சர்க்கரை நோய் என்றால் என்ன:

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உடலின் மற்ற பாகங்களுக்கும் சேதம் ஏற்படுகிறது.

உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தபடவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம்.

சர்க்கரை நோயின் வகைகள்:

  வகை 1 நீரிழிவு:
இது பொதுவாக சிறு வயதில் தொடங்குகிறது. இதில், கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகிறது. 
வகை 2 நீரிழிவு:
இது வயது முதிர்வர்களுக்கு அதிகம் வரும். இதில், இன்சுலின் எதிர்ப்பு அல்லது இன்சுலின் பற்றாக்குறை காரணமாக சர்க்கரை அளவு அதிகமாகிறது. 

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

வெயில் காலம் என்பதால், நமக்கு பெரும்பாலும் தண்ணீர் தாகம் இருப்பது இயல்பானது. ஆனால் சிலருக்கு அளவுக்கு மீறிய தண்ணீர் தாகம் இருக்கும்.

அதனால் அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி தண்ணீர் குடிப்பதால், சிறுநீரும் அடிக்கடி வெளியேறும்.

இதனால் தான் சர்க்கரை வியாதிக்கு நீரிழிவு நோய் என பெயரிடப் பட்டது. இந்த அறிகுறியை மக்கள் இயல்பாக, தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. அதனால் குடிக்கறேன் குடிக்கறேன் என்று கடந்து விடுகிறார்கள்.

எதுவுமே ஒரு அளவிற்குள் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதி என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அடுத்தபடியாக பசி அதிகமாக இருக்கும். பசித்த உடனே சாப்பிடவில்லை என்றால், மயக்கம் வருவது போல் இருக்கும் அல்லது மயங்கி விடுவார்கள்.

பசியால் சோர்வாக இருப்பது அல்லது பசியை பொறுக்க முடியாமல் இருந்தாலும், உடனடியாக மருத்துவரை பார்த்து விடுவது நல்லது.

அடுத்தபடியாக எடை குறைவது. ஆரோக்கியமான எடையுடன் இருப்பார்கள்.
சில மாதங்களில் உடல் எடை தானாக குறைந்து விடும்.

அதுவும் அவர்களுக்கு புரியாது. உடல் எடை தானாக குறைவது சந்தோசமாக எடுத்துக் கொள்ள முடியாது. சர்க்கரை வியாதியின் தாக்கமாகக் கூட இருக்கலாம்.

இப்படியாக, தாகம் அதிகமாக எடுப்பது, பசி அதிகமாக எடுப்பது , சிறுநீர் அடிக்கடி வெளியேறுவது, எடை குறைவது போன்ற நான்கு அடிப்படையான அறிகுறிகளால் சர்க்கரை வியாதியின் தன்மையை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் ஏதோவொன்று, உடலில் தென்பட்டாலும் கூட, மருத்துவரை உடனடியாக சந்தித்து விடுவது நல்லது.

சர்க்கரை நோய் என்று தெரிந்து விட்டால், அதற்கான அடிப்படை சிகிச்சை முறைகளிலேயே மருத்துவரின் ஆலோசனைப் படி நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

 

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள்:

 

சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்றால், முதலில் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். அதாவது சிறிய ரத்த நாளங்கள் மற்றும் பெரிய ரத்த நாளங்கள் இரண்டுமே பாதிக்கப்படும்.

நுண்குழல் என்று சொல்லக் கூடிய சிறிய ரத்த நாளங்களில் தான் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

அதாவது உடலில் உள்ள உறுப்புகளான கண், கிட்னி மற்றும் நரம்புகள் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகும்.

கண்ணிற்கு ரெட்டினோபதி என்று கூறுவார்கள். ஆதாவது, கண் பாதிப்பிற்கு மருந்து எடுக்காமல் இருக்கும் போது, பார்வையை இழக்க நேரிடும்.

மேலும் கிட்னி பாதிப்பிற்குஉள்ளாகும். சர்க்கரையால் கிட்னி பாதிப்புக்குள்ளாகும் போது , சிறுநீருடன் புரோட்டீன் வெளியேற ஆரம்பிக்கும்.

மேலும் நரம்பின் பாதிப்பை நியோரோபதி என்பார்கள். நரம்பு பாதிப்படையும் போது, காலின் பாதத்தில் எரிச்சல் வரும். அடுத்த படியாக கைகளிலும் எரிச்சல் வரும். இந்த பாதிப்புகள் அனைத்துமே நுண்குழல் பாதிப்பால் ஏற்படக் கூடியவை.

அடுத்தபடியாக பெரிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் போது ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

அதாவது, இருதய நோய், இருதய வலி, பக்கவாதம் போன்றவை எல்லாம் சர்க்கரை வியாதியால் பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பினால், மற்ற பெரிய நோய்களுக்கும் ஆளாகிறோம். இவையெல்லாம் சர்க்கரையால் உடலில் ஏற்படும் பாதிப்புகளாகும்.

மேலும் அல்சர் வரலாம். தொற்று நோய்களான யூரின் இன்பெக்சன், தோலில் இன்ஃபெக்சன் ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதி ஒரு மெட்டோபாலிக் பிரச்சனையாக இருப்பதால், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள்:

 

சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதற்கு, சில டெஸ்ட்கள் எடுக்க வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு தடவையும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கடந்த பின் எடுக்கக் கூடிய டெஸ்ட் மற்றும் ஆவேர்ஜ் இண்ட்ரோல் சுகர் என்று சொல்லக் கூடிய மூன்று மாதத்திற்கு ஒரு முறை எடுக்கக் கூடிய டெஸ்ட் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

பெரும்பாலும் மக்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை ஹெல்த் செக் அப் எடுத்துப் பார்த்துக் கொள்வது நன்மையானதும் கூட.

சாப்பிட வேண்டிய காய்கள்:

வாழைக்காய், வாழைப்பிஞ்சு, வாழைத் தண்டு, வெண்டைக்காய், முட்டைக் கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப் பிஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக் காய் ஆகிய காய்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கீரை வகைகள்:

ஆரைக்கீரை, புதினா, கறிவேப்பிலை, முசுமுசுக்கை கீரை, வல்லாரை கீரை, பொண்ணாங்கண்ணி கீரை, முருங்கை கீரை, சிறு கீரை, மணத்தக்காளி கீரை , துத்திக் கீரை ஆகிய கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் உடவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழவகைகள்:

மலைவாழை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். பேரிச்சம் பழம், கொய்யாக் காய், பப்பாளி, ஆப்பிள், விளாம் பழம் ஆகியவற்றை ஒரு நாளைக்கு ஒரு வகையான பழம் என்ற விகிதத்தில் 50 கிராம் சாப்பிடலாம்.

சாப்பிட கூடாத உணவுகள்:

உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஆட்டுக் கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு,
தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றில் சமைத்த திண் பண்டங்கள், உணவுகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றை தவிர்த்தே ஆக வேண்டும்.

நாம் உணவ எடுத்துக் கொள்ளும் நேரமும் முக்கியமானது. காலையில் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். மதியம் 12 மணி மற்றும் இரவு சாப்பாடு கண்டிப்பாக. 6 முதல் 7 மணிக்குள் சாப்பிட வேண்டும்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மற்றும் எடை இழப்பு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவை. 

 

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க நாம் செய்ய வேண்டியவை:

  • காலையில் காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மாறாக ஆவாரம் பூ டீ குடிக்க வேண்டும். ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு டீஸ்பூன் போட்டு டீ குடிக்க வேண்டும்.
  • நீல நிற சங்கு பூவை நிழலில் காய வைத்து பொடி செய்து, டீ போட்டு குடிக்க வேண்டும்.
  • சுரைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் சிறிதளவு இஞ்சி, மல்லி இலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதனுடன் லெமன் சேர்த்து ஜீஸாக குடிக்க வேண்டும்.
    பூசணிக்காய் ஜீஸ் குடிக்க வேண்டும்.
  • 100 கிராம் வெந்தயம், 100 கிராம் கருஞ்சீரகம் மற்றும் வாணலியில் இட்டு வறுத்து போடி செய்து வைத்துக் கொண்டு. இதனை சிறிதளவு தூங்க செல்லும் முன் சாப்பிடனும்.

 

 

 

அதேபோல் கர்ப்பகால நீரிழிவு பற்றி பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

கர்ப்பகால நீரிழிவு என்றால் என்ன:

கர்ப்பகால நீரிழிவு என்பது கருவுற்று இருக்கும் சில பெண்களுக்கு 5 மாதத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் சில ஹார்மோன்களின் மாற்றத்தினால் சர்க்கரை அளவு அதிகரித்து கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகள்:

கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படுவதினால், அந்த தாயிற்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். சர்க்கரை ஆளவு அதிகரிக்கும்.

சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருந்தால், அது குழந்தை பிறக்கும் போதே, அதிக சர்க்கரை அளவுடன் பிறக்கலாம் அல்லது பிறந்தவுடன் குழந்தைக்கு வலிப்பு நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எடை குறைவான குழந்தை பிறக்கலாம். அல்லது பிரசவ தேதிக்கு பிறகு பிறக்கும் பட்சத்தில், குழந்தையின் எடை அதிகரித்து பிரசவம் மிகவும் கடினமானதாக இருக்கலாம்

எனவே, கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

 

கர்ப்பகால நீரிழிவு தற்காத்துக் கொள்ளும் வழிகள்:

கர்ப்பகால நீரிழிவு இருப்பது தெரிய வந்தால், உணவுக் கட்டுப்பாடு மிக மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு வகைகள், சர்க்கரை கலந்த பானங்களை தவிர்த்து விட வேண்டும்.

சிறிது நேரம் நடக்க வேண்டும். வீட்டில் தயாரித்த உணவுகளையே உண்ண வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறையோ, அல்லது இரண்டு முறையோ சர்க்கரையின் அளவு தெரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அதற்கு தகுந்தவாறு நடந்து கொள்ள வேண்டும்.

 

 

மேலும் சிலர், சர்க்கரை வியாதிக்கு மருந்து எடுப்பதால், பிரஷர் மற்றும் தைராய்டு மற்றும் கொலஸ்ட்ரால் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப் படுவார்கள்.

மனித உடல் அகமும், புறமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது. அதனால் உடல் என்பது நாம் வெளியே பார்ப்பது மட்டுமல்ல. நம் உடல் உள்ளே, வெளியே என்று எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனால் உடலில், பிரஷரும், தைராய்டும் இருக்கும் போது, சர்க்கரைக்கு மட்டும் சிகிச்சை எடுத்தால், பிரசரால் ரத்த நாளங்களில் சில தடைகள் உண்டாகலாம்.

அதனால் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை எடுத்தாலும், சர்க்கரை சரியான விகிதத்தில் வராமல் போகும்.

இதனால் மக்கள் என்ன தான், சர்க்கரை மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டாலும், உடலில் மெட்டாபாலிக் சார்ந்த மற்ற தொந்தரவுகள் ஏற்படத்தான் செய்யும்.

அதனால் தான் சர்க்கரை வியாதியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது.

இவ்வாறாக, உடலில் சர்க்கரை வியாதியால் ஏற்படும் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் வலிகளையும் உணர்ந்து, உடனே சிகிச்சை எடுத்து விடுங்கள். நம் உடலுக்கு நாம் தான் எஜமானர். அதில் என்ன தொந்தரவு வந்தாலும், அதை சரி செய்வதே நமது கடமையாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *