நம் உடல் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான ஊட்டச் சத்துக்களைக் கொண்டு சேர்ப்பது, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவது என எண்ணற்ற செயல்பாடுகளுக்கு ‘நீர்ச்சத்து’ அவசியமாகிறது. அது மட்டுமல்ல, மூட்டுகளின் உராய்வைத் தடுப்பதற்கும், சருமத்தின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைப்பதற்கும் ‘நீர்ச் சத்து’ முக்கியத் தேவையாக உள்ளது.
நம் உடலில் போதிய ‘ நீர்ச்சத்து’ இல்லாமல் போனால், நீரிழப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக உடற்சோர்வு, தலைச்சுற்றல், உடலின் இயல்பான செயல்பாடுகள் அனைத்துமே பலவீனமடைந்து விடும். கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க, ‘நீர்ச்சத்து’ நிறைந்த காய், கனிகளைச் சாப்பிடுங்கள். அவற்றில், விதவிதமான ரெசிபிகள் தாயாரித்து உண்டு, உடலைப் பேணுங்கள்.
நீர்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் உண்பதால் நம் உடல் வெப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். பல விதமான வகைகளில் செய்து சாப்பிடலாம்.
வெள்ளை பூசணிக்காய்:
வெள்ளை பூசணியில் ,நீர்ச் சத்து’ அதிகம் உள்ளது. வெள்ளை பூசணி ஜீஸ் உடலைக் குளிர்ச்சி அடையச் செய்கிறது உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வாரம் இருமுறை வெண் பூசணியை ஜீஸ் செய்து குடிக்கலாம்.
வெள்ளை பூசணியுடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஜீஸை ஒரு டம்ளரில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளவும். எலுமிச்சை ஜுஸ், கருப்பு உப்பு, தேன் மற்றும் புதினா சேர்த்து நன்கு கலக்கவும். பூசணி ஜீஸ் தயார்.
பச்சைப் பயறு பானம்:
வெயிலுக்கு உடல் சூடு குறைய இந்த பச்சைப் பயறு பானம் ஒரு சிறந்த பானமாகும்
இந்த பானம் செய்வதற்கு பச்சைப் பயிறு கடாயில் போட்டு 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பச்சைப் பயிறு மிக்ஸியில் போட்டு அதனுடன் துருவிய தேங்காய், ஏலக்காய், பாதாம் மற்றும் முந்திரி சேர்த்துக் கொள்ளவும்.
கேழ்வரகு பானம்:
கேழ்வரகில் பல சத்துக்கள் உள்ளன. இதனை ராகி என்றும் அழைப்பார்கள். இந்த கேழ்வரகை வைத்து பல உணவு வகைகள் செய்தாலும், சம்மர்க்கு ஏற்ற கூல் ரெசிபி செய்யலாம்.
இதைச் செய்வதற்கு ஒரு கப் கேழ்வரகு மாவை எடுத்து நன்கு கரைத்து கொள்ளவும்.
பின்பு கதை அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்.
8 பாதாம் எடுத்து சுடு தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பேரிச்சம் பழம் 7 எடுத்து குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும்.
2 மணி நேரம் ஊறிய பாதாமை தோலுரித்து மிக்ஸியில் போடவும். பாதாம் ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்த கூடாது.
பின்பு பேரிச்சம் பழத்தை பாதாமுடன் மிக்ஸியில் போட்டு, அதனுடன் ஆற வைத்த கேழ்வரகு மாவு, பீட்ரூட் ஜூஸ் கலந்து மிக்ஸியில் அடித்து பின்பு பறிமாறவும். இந்த பானம் வெயிலுக்கு மிகவும் உகந்தது.
நுங்கு:
பனை மரம் நம் தேசிய மரமாக கருதப்படுகிறது. அனைத்து கால நிலைகளிலும் வளரக் கூடியது. பனையில் கிடைக்கும் அனைத்துமை குளிர்ச்சியானவை. பனை கிழங்கு, நுங்கு, பதநீர், பனை கருப்பட்டி மற்றும் பனை வெல்லம் ஆகியவை நம் உடம்புக்கு அனைத்து வகையிலும் குளிர்ச்சி அளிக்கும்.
நுங்கு அப்படியே சாப்பிடலாம். அல்லது நுங்கு ஜுஸ் , நுங்கு பாயாசம் செய்தும் சாப்பிடலாம். இதனால் நம் உடல் கோடைகாலத்திலும் வெப்பநிலை சம நிலையில் இருக்கும்.
நுங்கு ஜுஸ் செய்வதற்கு தேவையான அளவு நுங்கை எடுத்து மிக்ஸியில் போடவும். அதனுடன் பால், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து அரைக்கவும். நுங்கு ஜுஸ் தயார்.
அடுத்து பனையில் பனம்பழம் கிடைக்கும். இதனை அப்படியே விறகு அடுப்பில் வைத்து சுட்டும் சாப்பிடலாம் அல்லது பனம் பழம் ஜுஸ், பனம் பழம் அதிரசம் செய்தும் சாப்பிடலாம்.
முலாம் பழம்:
கோடைக்கு ஏற்ற பழம் முலாம் பழம். இந்த ஜுஸ் கோடை காலத்திற்கு ஏற்ற ஜீஸ் ஆகும்.
முலாம் பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது, இது வெப்பமான கோடையில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது, மேலும் அதை வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது. உடலில் நீர்ச்சத்து சரியாக இருக்கும்போது, அது நன்றாகச் செயல்படும்.
இளநீர்:
கோடை கால உணவுகளில் மிக முக்கியமானது இளநீர். நம் உடல் வெப்ப நிலையை சீராக வைத்து, வேப்ப நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர், பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருப்பதாக மருத்துவம் கூறுகிறது. இளநீர், கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கும்.
பப்பாளி:
கோடை காலத்தில் மலச்சிக்கல் எல்லோருக்கும் இருக்கும். இதற்கு பப்பாளி ஒரு சிறந்த தீர்வாகும். ஒருவருகாகு மலச் சிக்கல் வருடக் கணக்காக நீடித்தால் அவர்களுக்கு அதன் தோடர்பான பாதிப்புகள் அதிகம் வரும்.
அது மலச் சிக்கலாக இருந்தாலும் சரி, அதன் தொடர்பான வேறு தொல்லைகளாக இருந்தாலும் சரி, பப்பாளியை மட்டுமே உண்டு சரி செய்து கொள்ள முடியும்.
ப்பாளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, உயிரச்சத்து, தாதுச்சத்து போன்ற அனைத்து விதமான சத்துக்களும் இருப்பதால் அதனை ஒரு முழுமையான உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
முக்கனிகள் சாப்பிட வேண்டும்:
மா, பலா, வாழை என முக்கனியைப் போற்றி கொண்டாடிய தமிழகத்தில் தான் பழங்கள் சாப்பிடுவதையே குறைத்துக் கொண்ட தலைமுறையாகப் பார்க்கிறோம்.
அதிலும் குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறை கோடையில் மென்பானங்களை அருந்துவதற்குத் தருகிற முக்கியத்துவத்தைப் பழங்களைச் சாப்பிடுவதற்குத் தருவதில்லை.
பழங்கள் ஏன் சாப்பிட வேண்டும்:
கோடையில் வெப்பம் அதிகரிக்க , அதிகரிக்க வியர்வையின் அளவும் அதிகரிப்பதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது
வியர்வை வழியாகச் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், யூரியா எனப் பல உப்புகள் அளவுக்கு அதிகமாக வெளியேறி விடுவதால், ரத்த ஓட்டமும் ரத்த அழுத்தமும் குறைகின்றன.
சிறுநீர் வெளியேறுவது குறைகிறது. இந்த நீரிழப்பை ஈடுகட்டப் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக ஒருவருக்கு நாளொன்றுக்குத் தேவையான தண்ணீரின் அளவு மூன்று லிட்டர்.இதையே கோடை காலத்தில் இரண்டு மடங்காக குடிக்க வேண்டும்.
எவ்வளவு தான் தண்ணீரைக் குடிப்பது என்று அலுத்துக் கொள்கிறவர்களும், சுத்தமான கடிநீருக்குச்சிரமப்படுபவர்களும் தண்ணீர்ச் சத்து மிகுந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
இப்படிப் பழங்களை அதிகமாகச் சாப்பிடும் போது நீர்ச் சத்துடன் பல வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் கிடைப்பதால், உடலில் ஏற்படும் பல வெப்பப் பிரச்சனைகள் உடனுக்குடன் சரியாகின்றன.
கொடை வள்ளல் தர்பூசணி:
வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்களில் முதலிடம் வகிப்பது, தர்பூசணி.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் என்று பல சத்துக்கள் காணப்பட்டாலும், இதில் 90 சதவீதம் தண்ணீர்ச் சத்து தான் இருக்கிறது.
கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்து, நீர்ச்சத்தைச் சமநிலைப்படுத்துவதும் தாகத்தை உடனடியாகத் தணிப்பதில் முன்னிலை வகிப்பதும் இதுவே.
கோடையில் தினமும் தர்பூசணியைச் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் 25 சதவீதம் அதிகரிக்கிறது.
உடலின் வெப்பநிலை குறைகிறது. இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.
தர்பூசணியில் உள்ள ஃபைட்டோநியூட்ரியன்ஸ் எனப்படும் இயற்கைச் சத்துக்கள் நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகின்றன. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
வெப்பத்தை விரட்டும் வெள்ளரி:
வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கும் இயற்கையின் வரப் பிரசாதம், வெள்ளரி.
இதன் முக்கியப் பலனே உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவது தான். அதிக அளவு நீர்ச்சத்தும் குறைந்த கலோரிகளும் கொண்ட வெள்ளரி, உடலில் நீரிழப்பால் ஏற்படுகிற சிறுநீர்க் கடுப்பைக் குறைக்கிறது.
வெயில் காலத்தில் அதிகப்படுகிற சிறுநீர்க் கல் கரையவும் உதவுகிறது.
பிஞ்சு வெள்ளரிக்ஸகாயில் உப்பும், மிளகாய்த் தூளும் சிறிதளவு கலந்து சாப்பிடுவோம். இந்த உப்பில் உள்ள சோடியம் தாது வியர்வையில் இழக்கும் சோடியத்தை ஈடுகட்ட உதவுகிறது.
மேலும், வெள்ளரிக்காயுடன் தக்காளி சேர்த்துச் சுவையான சாலட் ஆகவோ, பச்சடியாகவோ செய்து வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இனிப்புச் சுவையை விரும்புபவர்கள் வெள்ளரிப் பழத்தை சாப்பிடலாம்.
வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கு
கண்களில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சலைப் போக்க, வெள்ளரித் துண்டுகளைக் கண் இமைகளின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால் கண் அயர்ச்சி நீங்கிப் புத்துணர்வு ஏற்படும்.
சிட்ரஸ் பழங்கள்:
திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிங்காய் போன்றவற்றைச் சிட்ரஸ் பழங்கள் என்கிறோம்.
இவற்றில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதே இதற்கு காரணம். இந்தச் சத்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்குகிறது.
கோடையில் முதியவர்களும், குழந்தைகளும் அதிக நேரம் வெயிலில் அலைந்தால் மயக்கம் அடைவார்கள். இவர்களுக்கு பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.
எனவே இந்த வயதில் இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய், திராட்சை அல்லது ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
எலுமிச்சை நன்னாரி கலந்த சர்பத் அருந்தி வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் அதிகமாகப் போகும்.
இவற்றில் உள்ள குளுக்கோஸ் உடனடியாக ரத்தத்தில் கலந்து விடும் என்பதால் விரைவிலேயே உடல் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கும்.
பழங்களின் பொதுவான பலன்கள்:
பழங்கள் கோடை காலத்தில் மட்டுமல்ல எல்லாப் பருவத்திலும் நமக்கு நன்மை செய்கின்றன.
நம் உடலுக்குத் தேவைப்படுகிற பலவித சத்துக்களைக் குறைந்த செலவில்அள்ளித் தருவது பழங்களே.
பழங்களில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் உள்ளன.இதனால், உடல் பருமன் தடுக்கப்படும். செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
பப்பாளி, கொய்யா, பலாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் உள்ள வைட்டமின் சி சத்து சளித் தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
எலும்பு மூட்டுகளில் கொலாஜன் என்ற புரத உற்பத்திக்கு உதவுகிறது.
நாவல் பழத்தில் உள்ள ஜம்போலின் எனும் குளுக்கோசைடு ரத்த சர்க்கரையைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச் சத்து இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.
வாழைப் பழம், கிர்ணிப் பழம், சாத்துக்குடி போன்றவற்றில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
பப்பாளி, மற்றும் மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் பார்வையைப் பாதுகாக்கிறது. மாலைக் கண் நோயைச் சரி செய்கிறது.
பல்வேறு பழங்களில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. எனவே, ஒரு நாளைக்கு 100 லிருந்து 500 கிராம் வரை பழங்களைச் சாப்பிடுவது நல்லது.
கோடையில் சாப்பிட வேண்டிய காய்கள்:
கோடையில் பழங்கள் மட்டுமல்லாமல் காய்களும் நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காய்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முள்ளங்கி, தக்காளி, சுரைக்காய், பூசணிக்காய் போன்ற காய்களையும் நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தை விரட்ட நாம் அதிகமாக நீரேற்றம் மிக்க பழங்களையும், காய்களையும் எடுத்துக் கொள்வதால் வெப்ப நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.